My Blog List

முள்ளி வாய்க்கால்.................. முடிவல்ல தமிழனுக்கு !!!


ஈழத்தமிழரை
அழிக்கப்போகிறோம் அடியோடு,
அறைகூவல் விடுத்தது,

சிறீலங்காவில்
சிங்கள அரசு. உதவிக்காய்
உலக நாடுகளையும் அழைத்தது.

பித்தர்கள் இவர்கள்,
வெறும் சதைப்பிண்டங்களையே
அழிக்கமுடியும் இவரின்துப்பாக்கியும் குண்டுகளும்,

ஒவ்வொரு அணுக்களிலும்
அலைமோதி ஆர்ப்பரிக்கும்
உணர்வுகளை அழித்திடுமோ இவை...?

ஈனப்பிறவியல்ல
ஈழத்தமிழினம், இவர்
உதிர்ந்த ரத்தமும் பேசும் விடுதலை.

*****

மூடர்கள் அன்றொரு
மே -யில் வியூகம்
வரைந்தனர்,

இந்தியா உள்ளிட
அமெரிக்கா, பிரிட்டன்,
யப்பானென.

தமிழரை அழிக்க,
தமிழரின் தாயகத்தையழிக்க,
தாயகத்தின் தாயையழிக்க.

இந்திய "பிரதீப்சிங்"
அமெரிக்க "லாரன்ஸ் ஸ்மித்"
"ஆன்டன்கோஸ்" பிரிட்டன் சார

இவர் எல்லோரையும் கூட்டி
ஈழத்தமிழரை கூண்டோடழிக்க
கூறுங்கள் வியூகமெனக் கெஞ்ச,

அமைத்து இவரும்
அழித்தனர் தமிழரை, தமிழின்
ஆணிவேரும் அழியட்டும் என.

*****

தமிழ் சாகுமா...? நம்
தமிழினம் சாகலாம், ஆனால் அவன்
சாம்பலும் புதுப்பிக்கும் தமிழை.

தமிழோடு நம் தமிழினம்
சாகவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறது
முளையாகிச் செடியாகி,

விருட்சமாகி ஒரு நாளில்
விடிவெள்ளியைத் தாங்கி நிற்கும்.
சூரியனும் அதற்கு நிகரற்று.

எள்ளென்று நினைத்து
கிள்ளி யெறிய நினைத்தவர்க்கு
முள்ளி வாய்க்கால் முடிவல்ல.

இது வீரத்தின் உச்சம்,
விவேகத்தின் மிச்சம்,
துச்சர்கட்கே இது துரோகம்.

புரட்சிகள் தான்
புதுப்பிக்கும் புதிய வாழ்வை,
வரலாறுகள் தந்த பாடங்கள்பலவுண்டு.

கட்டுக்குள் அடக்கமுடியா
கண்ணீர்கள், பல
அணைக்கட்டுகளை உடைக்கலாம்.

வீரத்தோடு விடியவே
வீழ்ந்த தமிழினம்
உரமாகியிருக்கிறது.

ஓடிய இரத்தங்கள், நாம்
தேடிய விடியல் தாகத்தில்
கூடிய ஆறுகள். ஆகவே,

அழாதீர்கள்.....
அழாதிர்கள், அவர்கள்
இறக்கவில்லை,

தீயில் போட்டாலும்
தீய்த்துவிடும்,, தீயை.
அது தான் நம் தமிழ்.

அவர்கள் எம்மில்
உற்பவமாக விரும்புகிறார்கள்
அனுமதியுங்கள்.

நமக்குள்
பிறந்திருக்கிறார்கள், இன்னும்
பிறக்க இருக்கிறார்கள்.

முள்ளி வாய்க்கால்
முடிவல்ல -துயரம்தான், ஆனால்
வீரத்தின் உச்சமது.

ஆகவே அழாதீர்,
ஆறுதல் படுத்துங்கள்.
அழுதுகொண்டிருக்கும் ஈழத்தாயரை.